முடிவுக்கு வந்த அரசியல் நெருக்கடி… பஞ்சாப்பின் புதிய முதல்வராகும் சரண்ஜித் சிங் சன்னி…!
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராகிறார் சரண்ஜித்சிங் சன்னி.
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராகிறார் சரண்ஜித்சிங் சன்னி.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அங்கு உட்கட்சி பூசல் தலையெடுத்தது. அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக முதலமைச்சராக இருந்த அம்ரீந்தர் சிங், சித்து இருவருக்குமான கருத்து வேறுபாடு உச்சத்துக்கு போனது.
ஒரு கட்டத்தில் கடும் நெருக்கடியை சந்தித்த அம்ரீந்தர் சிங் கட்சியின் தலைமை மீது அதிருப்தி கொண்டு தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் விலகிய நிலையில் நேற்று கூட்டப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் யார் என்பதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. தொடர் குழப்பம் நிலவியதால் கூட்டம் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் அறிவித்தபடி இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கட்சி மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் அறிவித்தார். புதிய முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் சன்னி, அம்ரீந்தர் அமைச்சரவையில் ஐடி அமைச்சராக இருந்தவர்.