ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமைக்கு கொண்டுவரப்படும்போதே அவரது உடல்நிலை மிகவும் மோசமாகவே இருந்ததாக மருத்துவர்கள் தகவல்.

இன்று காலை தனது ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையாகி விழுந்துள்ளார். காலை 11.30 மணியளவில் அவர் பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

46 வயதாகும் புனீத் ராஜ்குமாரின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை வழங்கிவரும் மருத்துவர்கள் குழுவின் தலைவர், டாக்டர். ரங்கநாத் நாயக் தெரிவித்துளார். மருத்துவமனைக்கு கொண்டுவரப்படும்போதே அவரது உடல்நிலை மோசமடைந்திருந்ததாகவும், தற்போது தீவிர சிகிச்சை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், புனீத்தின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாகவும், தங்களால் முடிந்தவரை சிறந்த சிகிச்சையைத் தருகிறோம், வேறு எதுவும் சொல்ல இயலாது என்றும் மருத்துவர் நாயக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புனீத் இறந்துவிட்டார் என்ற வதந்தியும் கர்நாடகா முழுவதும் பரவிவருகிறது. மறைந்த சூப்பர்ஸ்டாரும், கர்நாடக அரசியல் கிங்மேக்கரான ராஜ்குமாரின் மகன் புனீத் என்பதால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவிவருகிறது. முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இதற்கிடையில், நடிகை லஷ்மி மஞ்சு புனீத் ராஜ்குமார் இறந்துவிட்டதாக ட்விட்டரில் இரங்கல் பதிவிட குழப்பம் அதிகரித்துள்ளது. புனீத் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று அவரது ரசிகர்கள் உலகம் முழுவதிலிருந்தும் வேண்டத்தொடங்கிவிட்டனர்.