பட்டாகத்தியில் கேக்வெட்டிய புள்ளிங்கோ.. பொது மக்களை கொத்து கறி போடுவதாக மிரட்டல்.. தட்டி தூக்கிய போலீஸ்.
பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடுவது போன்றும், அவர்கள் அங்கு சில பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
சென்னையில் பட்டா கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய வாலிபர்கள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வேளச்சேரி எம்.ஜி.ஆர் நகரில் கடந்த 19 ஆம் தேதி இரவு சிலர் வாலிபர்கள் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடுவது போன்றும், அவர்கள் அங்கு சில பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில் அந்த சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் அய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பட்டா கத்தியை கொண்டு பிறந்தநாள் கொண்டாடிய நபர்கள் விஷ்வா(18) , அவரின் நண்பர்களான கரண்(18), சக்திவேல்(18), சுரேஷ்(18), அருணாச்சலம்(20), முரளி(18) விக்கி (எ) விக்னேஷ்(18), ஐய்யனார்(18) என்பது தெரியவந்தது, அக்கொண்டாட்டத்தின் போது இவர்களின் செயலை தட்டிக்கேட்ட பொதுமக்களை அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் கேக் வெட்ட பயன்படுத்திய பட்டாகத்தியையும் போலீசார் கைப்பற்றினர். அவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக இளைஞர்கள், சிறுவர்கள் பட்டா கத்திகளுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது தவறு என்றும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்று எவரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதோடு சட்ட ரீதியாக கடுமையான தண்டிக்கப்படுவர் எனவும் போலீசார் எச்சரித்துள்ளார்.