pugazhendhi speech at tanjore

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் தினகரனுக்கு அதிமுக-வில் நாஞ்சில் சம்பத்தும், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியும் மட்டும் தினகரனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த வகையில் நேற்று சசிகலா மற்றும் நடராசனின் சொந்த ஊரான தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் திரளாக மக்கள் வந்துவிடக் கூடாது என்று முன்னாள் அமைச்சரும் இப்போது எடப்பாடி அணியில் இருப்பவருமான வைத்திலிங்கம் மும்முரமாக செயல்பட்டார். 

ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சுமார் இரண்டாயிரம் பேர் திரண்டனர்."டாக்டர் வெங்கடேஷின் மாமனார் பண்ணை வயல் பாஸ்கர்தான் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். நம் சொந்த மண்ணான தஞ்சையில் நம்மை நிரூபித்தே ஆக என்று கங்கணம் கட்டிக்கொண்டு கூட்டத்தை சேர்த்துவிட்டார்" என்றனர் சில நிர்வாகிகள்.

மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் இல்லாமலேயே நடந்த கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத் வழக்கம்போல தாறுமாறாக பேசினார். "ஓ.பி.எஸ். அணி என்பது ஓ.ஏ.பி. அணி அதில் இருப்பவர்கள் எல்லாம் வயதானவர்கள். இளைஞர்கள் எல்லாரும் தினகரனிடம்தான் இருக்கிறார்கள்" என்றார்.

கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி பேசுகையில், "அப்போலோவில் அம்மா நர்சுகளின் கையை பிடித்துக்கொண்டு நடந்த போட்டோக்கள் என்னிடம்தான் உள்ளன. என் கையில்தான் அந்த போட்டோக்கள் இருக்கின்றன. சின்னம்மா உத்தரவு கொடுத்ததும் அவற்றை வெளியிடுவேன்" என்று குறிப்பிட, கூட்டத்தின் நடுவில் இருந்து சிலர் "இப்பவே வெளியிடுங்க" என்றனர்.

ஏற்கெனவே இதுபோல ஜெயலலிதாவின் மருத்துவமனை போட்டோக்களை வெளியிடுவேன் என்று பேசியிருந்தார் புகழேந்தி. ஆனால், தஞ்சையில் மக்களே வெளியிடுங்கள் என்று கேட்டும், அதை கண்டுகொள்ளாமல் தன் பேச்சில் கடந்து போய்விட்டார்.