Ramadoss: போலீசாரால் சீரழிக்கப்பட்ட இருளர் இன பெண்களுக்கு நீதி வழங்குங்க.. முதல்வருக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்
இருளர் இன பெண்கள் காவலர்களால் சீரழிக்கப்பட்ட வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. இது குறித்து கடந்த மாதம் இதே நாளில் அறிக்கை வெளியிட்டுள்ளேன். இந்த வழக்கை விரைந்து முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இருளர் சமுதாயப் பெண்களுக்கு உடனடியாக ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த டி.மண்டபம் கிராமத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த காசி என்பவரை கடந்த 2011-ஆம் ஆண்டு திருக்கோவிலூர் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு அவரது மனைவி லட்சுமி, மாமனார் குமார், சகோதரிகள் ராதிகா, வைத்தீஸ்வரி, சகோதரர்கள் படையப்பா, மாணிக்கம் உள்ளிட்ட 6 பெண்கள் உட்பட 14 பேரை போலீசார் அழைத்து சென்று மானபங்கம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் இரவு நேரத்தில் பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது என்ற உத்தரவை மீறி 6 பெண்களை காவல் நிலையத்தில் வைத்திருந்ததுடன், ஆண்களை தாக்கியதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட 15 பேருக்கும் தலா 5 லட்சம் வீதம் 75 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில், 15 இருளர் மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இது போதுமானதல்ல என்றாலும் இதை அரசு உடனே வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திருக்கோவிலூரில் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 15 இருளர் மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இது போதுமானதல்ல என்றாலும் இதை அரசு உடனே வழங்க வேண்டும்.
இருளர் இன பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டதைத் தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றம் இழைத்த காவலர்கள் மீது உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருளர் இன பெண்கள் காவலர்களால் சீரழிக்கப்பட்ட வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. இது குறித்து கடந்த மாதம் இதே நாளில் அறிக்கை வெளியிட்டுள்ளேன். இந்த வழக்கை விரைந்து முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்யும் பணியைக் கூட செய்யாமல் காவல்துறை இழுத்தடித்து வருகிறது. இந்த வழக்கை கண்காணிக்க பொறுப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்! என முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்..