தமிழகம் முழுவதும் தீயாய் பரவும் போராட்டம் !! இன்னுமொரு ஜல்லிக்கட்டு போராட்டமாக மாறுமா?
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. குறிப்பாக மாணவ-மாணவிகளின் போராட்டம் தீயாய் பரவி வருகிறது. இது மற்றுமொரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல் விஸ்ரூபார் எடுக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் பேருந்து கட்டணம் 2 மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை ராஜூக்கள் கல்லூரி, பொறியியல், பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் சிறைபிடித்தனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேறினர்.
திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி, துவாக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிஞ்சி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சத்திரம் பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் மாணவிகள் உட்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி மாணவிகள், அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று 3 வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவ, மாணவிகள், கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதே போல் வேலூர், குடியாத்தம் செய்யாறு, சிதம்பரம் திண்டிவனம்., சத்தியமங்கலம் நாமக்கல், தருமபுரி நாகர்கோவில் , தூத்தூர் உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளில் பேருந்து கட்டணம் எயர்த்தப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லை என்றால் மாணவர்கள் போராட்டம் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என்றும் இது மற்றுமொரு ஜல்லிக்கட்டு போராட்டமாக மாறும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.