வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று காலை 7.50 மணிக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, 10.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். இதனையடுத்து, தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 11 மணிக்கு சென்னை ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேடு தளத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு, 11.15 மணிக்கு விழா நடைபெறும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்றார்.
பின்னர், விழாவில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டினர். பின்னர், 3,770 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட, சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கமான, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை 9.05 கிலோ மீட்டர் வழித்தடச் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மெட்ரோ ரயில் பாதையானது, வடசென்னை பகுதியை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த ரயில் பாதையானது ரூ.293.40 கோடி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களுக்கு இடையிலான பயணம் எளிமையாகும். சென்னை மற்றும் எண்ணூா் துறைமுகங்களை இணைக்கும் வகையிலான இந்தத் திட்டத்தால் ரயில் பயணம் சுலபமாக நடைபெறும்.
இதேபோன்று, விழுப்புரம்-கடலூா்-மயிலாடுதுறை-தஞ்சாவூா் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூா் இடையிலான ஒற்றை வழி ரயில் பாதையானது ரூ.423 கோடியில் மின்வழித் தடமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.14.61 லட்சம் அளவுக்கு தினமும் எரிபொருள் சேமிக்கப்படும். இந்த மூன்று திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.4,486.40 கோடியாகும். இந்த திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.