மோடி என்ன பீடா கடை ஓனரா? இதுனாலதான் அவர் ஆலோசனை வழங்கினார்.. - சலசலப்பை ஏற்படுத்திய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...!
தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க பிரதமர் மோடி ஒன்றும் பீடா கடை ஓனர் இல்லை, நாட்டின் பிரதமர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தமிழகம் தற்போது அமைதியாக இருப்பதாக பலர் கூறி வருவதாகவும் ஆனால் அப்படி இல்லை எனவும் தெரிவித்தார்.
மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், தமிழ்தேச தீவிரவாதிகள் உள்பட அனைத்து தீவிரவாத அமைப்புகளும் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் இது தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே தெளிவாக தெரிந்தது எனவும் தெரிவித்தார்.
ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். திராவிட கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை அழித்துவிட்டனர் என குறிப்பிட்டார் பொன்னார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் எனவும் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு அடிக்கடி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தேனியில் நடைபெற்ற அதிமுக செயல் வீர்ர்கள் கூட்டத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாலேயே அணிகளை இணைத்தேன் எனவும் எனக்கு பதவி ஆசை கிடையாது எனவும் தெரிவித்தார்.
இதன்மூலம் மோடியே எங்கள் பக்கம்ன்னு சொல்லாம சொல்லியுள்ளார் பன்னீர்செல்வம்.
இந்நிலையில், சிவகாசியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அப்போது, தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க பிரதமர் மோடி ஒன்றும் பீடா கடை ஓனர் இல்லை, நாட்டின் பிரதமர் என தெரிவித்தார்.
மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நண்பர் என்ற முறையில் பிரதமர் மோடி அணிகள் இணைப்புக்கு ஆலோசனை வழங்கியதில் தவறு இல்லை எனவும் ஒரு பெரிய இயக்கம் பிளவுபடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் பிரதமர் ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே ஏற்கனவே மோடி தங்கள் பக்கம் இருப்பதாக மேடையில் பேசி சர்ச்சையை கிளப்பியவர் ராஜேந்திரபாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.