- Home
- Tamil Nadu News
- ஜல்லிக்கட்டு வீரர்கள், காளைகளுக்கு ஜாக்பாட்... இபிஎஸ் அளித்த தேர்தல் வாக்குறுதி..!
ஜல்லிக்கட்டு வீரர்கள், காளைகளுக்கு ஜாக்பாட்... இபிஎஸ் அளித்த தேர்தல் வாக்குறுதி..!
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடுகின்ற ஜல்லிக்கட்டு வீரர்கள் எதேச்சையாக காளைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும்.

நாமக்கல் மாவட்டம், சாலப்பாளையம் கிராமத்தில் சுமார் 1,000 காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கும் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டியை அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடக்கிவைத்தார்.முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைக்க வந்த எடப்பாடி பழனிசாமியை சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்றனர்.
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அவர்கள், ‘’நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், ரெட்டிப்பட்டி சாலப்பாளையம் கிராமத்தில் இன்று தமிழக பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பேணிக் காப்போம் என்றும் விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்யமாட்டோம் என்றும் வீரர்களான நாங்கள் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும் இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவோம்’’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘ஜல்லிக்கட்டு நம் முன்னோர்களின் பாரம்பரிய விளையாட்டு. இளைஞர்கள் காளையை அடக்கி தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்ற ஒரு அற்புதமான விளையாட்டு. கலாச்சாரத்தின் அடையாளம். இந்த ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்த குழுவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான் வருகின்றபோது சில கோரிக்கைகளை என்னிடம் வழங்கினார்கள்.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஈடுபடுகின்ற ஜல்லிக்கட்டு வீரர்கள் எதேச்சையாக காளைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவுசெய்யும் வீரர்களுக்கு அரசாங்கம் சார்பில் இன்சூரன்ஸ் செய்து கொடுக்கப்படும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கைப்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை கணக்கிட்டு, அவற்றுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படும்’’ என்று உறுதியளித்தார்.
