prime minister modi criticize congress
சாதி, மத ரீதியாக காங்கிரஸ் மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்காக தீவிரமாக பிரசாரங்களை மேற்கொண்டுவரும் பாஜகவும் காங்கிரசும், தேர்தல் நெருங்கிவிட்டதால் பிரசாரத்தையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இரு கட்சியினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரசாரம் செய்துவருகின்றனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கண்டிப்பாக ஜெயித்தே தீரவேண்டும் என்ற முடிவில் பாஜக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு குஜராத்தில் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸும் முனைப்புடன் உள்ளது.
இந்நிலையில், பிரசாரத்திற்காக இன்று குஜராத் வந்த பிரதமர் மோடி, கட்ச் மற்றும் பரூச் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.
பரூச் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்ன என்பதை குஜராத் மக்கள் நன்கு அறிவர். சாதிச்சண்டை, மதச்சண்டை ஆகியவற்றை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. அப்படி மக்கள், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால், அதைப் பார்த்துக்கொண்டு காங்கிரஸ் பாலாடை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் என காங்கிரஸை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
