முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் மாற்றப்பட்டது பற்றி மத்திய உள்துறைக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, முதலைமைச்சா் செல்வி ஜெயலலிதா மீண்டும் தனது பணிக்கு திரும்பும்வரை, அவரின் பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிக்கை வெளியிட்டார். அமைச்சரவை கூட்டங்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் என்றும் ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் மாற்றப்பட்டது குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். ஆளுநர் வித்யாசாகர் ராவ்வின் அறிக்கை கிடைத்துவிட்டதாக உள்துறை தெரிவித்துள்ளது.
