அசன் முகமது ஜின்னாவுக்கு போன் போட்ட அர்ச்சகர்கள்.. அட இப்படியொரு பின்னணியா..?
மதுரை மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில்கள் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்.
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னாவை நியமித்து இருக்கிறார்கள். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர். தி.மு.க., இளைஞர் அணி துணை செயலாளராக மட்டுமே வரை அனைவரும் அறிந்திருப்பர். இஸ்லாமியராக இருந்தபோதிலும், மத நல்லிணக்கதின்மீது அதிக அக்கறை கொண்டவர். மதுரை மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில்கள் மீது அதீத ஈடுபாடு கொண்டவர்.
அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில், ஏழை அர்ச்சகர்களுக்கு புயல், மழை பாதிப்பு நேரங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு அரசு பதவி கிடைத்த தகவல் வந்ததுமே, அந்த அர்ச்சகர்கள் அனைவரும் அசன் ஜின்னாவுக்கு போன் செய்து வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்.
அசன் முகமது ஜின்னா, திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை வக்கீல் அசன் முகமது. தாயார் தாஜூனிஷா. இவர்களுக்கு ஓரே மகனாய் பிறந்த அசன் முகமது ஜின்னா, நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியிலும், கருணாநிதி படித்த திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார்.
அதன்பின், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரியில் சட்டம் படித்து, 1999-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். இவரது தந்தை அசன் முகமது, நாகை மாவட்ட குற்றவியல் மற்றும் அரசு பிளீடராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவசரநிலை பிரகடனப்படுத்திய காலத்தில் முரசொலி நாளேட்டில் துணை ஆசிரியராக பணியாற்றியவர்.