பொறுமை இழந்த பிரேமலதா..! சசிகலாவை சந்திக்க திட்டம்..! அதிமுக – தேமுதிக கூட்டணி டமால்?
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அதிமுக கூட்டணியில் இருந்து விலக தேமுதிக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக அதிமுக கூட்டணியில் இருந்து விலக தேமுதிக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வெறும் நான்கு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினாலும் அதிமுக கூட்டணி வெற்றிக்காக கடுமையாக உழைத்தனர் தேமுதிக தொண்டர்கள். பிரேமலதா விஜயகாந்தும் நாற்பது தொகுதிகளிலும் சுற்றிச் சுழன்று அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்தார். ஆனால் பாமக செய்த உள்ளடி வேலைகளால் தேமுதிக வேட்பாளர்கள் வெற்றிக்கனியை பறிக்க முடியாமல் போனது. இதே போல் கடந்த 2014 தேர்தலிலும் பாமக தொண்டர்கள் தேமுதிகவிற்கு எதிராக உள்ளடி வேலை பார்த்தனர்.
இதனால் பாமக இருக்கும் கூட்டணியில் நீடிக்க பிரேமலதா விரும்பவில்லை என்கிறார்கள். அப்படியே இருந்தாலும் பாமகவிற்கு நிகரான தொகுதிகளை பெறுவதில் பிரேமலதா உறுதியாக உள்ளார். ஆனால் அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி விஷயத்தில் பாமகவிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கூட்டணி தொடர்பாக பாமக நிர்வாகிகளுடன் தினந்தோறும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேமுதிகவை அதிமுக மேலிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் நடத்தி வருகிறது. இதனால பொறுத்து பொறுத்து பார்த்த பிரேமலதா வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க ஆரம்பித்தார்.
அத்தோடு கூட்டணி விவகாரத்தில் தங்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்கிற ரீதியில் பிரேமலதா பேசி வருகிறார். இந்த நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பியுள்ளார் சசிகலா. அரசியல் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்த பல்வேறு வியூகங்களை அவர் வகுத்து வருகிறார். ஆனால் அதிமுகவினர் தற்போதைய சூழலில் சசிகலாவை விட எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கவே விரும்புகின்றனர். இதனால் வேறு வழியில் அரசியலில் தனது முக்கியத்துவத்தை நிரூபிக்க சசிகலா முயற்சிக்கிறார்.
இதனால் தான் டிடிவி தினகரனை தொடர்பு கொண்டு சசிகலா உடல் நலம் குறித்து ரஜினி விசாரித்த தகவல் வெளியே லீக் செய்யப்பட்டது. இது தவிர வேறு சில அரசியல் கட்சி பிரமுகர்களும் சசிகலாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்படி பேசியவர்களில் மிக முக்கியமானவர் பிரேமலதா விஜயகாந்த் என்கிறார்கள். சசிகலாவை தொடர்பு கொண்டு பிரேமலதா நலம் விசாரித்ததாகவும் அப்போது சில அரசியல் நடவடிக்கைகள் குறித்துஇருவரும் பேசியதாக சொல்கிறார்கள்.
தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ள நிலையில் அங்கு அந்த கட்சிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பாமகவிற்கு தான் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதனால் கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி பிரேமலதா ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் திமுக கூட்டணிக்கான ஆப்சன் குறித்தும் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியாகியுள்ள நிலையில் அவருடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று பிரேமலதா யோசித்துள்ளதாக சொல்கிறார்கள்.
இதனால் சசிகலாவை சந்திக்க பிரேமலதா முடிவெடுத்துள்ளதாகவும் அந்த சந்திப்பு தேமுதிக – அமமுக கூட்டணிக்கு வழிவகுக்கும் என்கிறார்கள். பிரேமலதாவின் இந்த வியூகம் நிச்சயம் எடப்பாடிக்கு நிச்சயம் அதிர்ச்சி அளிக்கும்.