குழந்தைகள் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்…. இவருக்கு வெளிநாட்டு பயணம் தேவையா? மோடியை வறுத்தெடுத்த தொக்காடியா…
காஷ்மீர், உத்தரபிரதேசம் என நாட்டின் பல பகுதிகளில் குழந்தைகள் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, பிரதமர் மோடியோ வெளிநாட்டுக்கு சுற்றப் பயணம் செய்து வருவதாக விஸ்வ ஹிந்து பரீஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொக்காடியா குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த வாரம் பாஜகவினரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதே போன்று உத்தரபிரதேச மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் 16 வயது இளம் பெண்ணை கற்பழித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இது போன்று பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த சமயத்தில் , பிரதமர் மோடி வெளிநாடு செல்வதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார்.
விஹெச்பியின் புதிய சர்வதேச தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரவீண் தொகாடியாவின் ஆதரவாளரான ராகவா ரெட்டியை தோற்கடித்து, ஹிமாசல் முன்னாள் ஆளுநர் வி.எஸ்.கோக்ஜே வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து, அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த தொகாடியா, 'மத்திய பாஜக அரசு, ஹிந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டதாகவும், அதைக் கண்டித்து, குஜராத் மாநிலம், ஆமதாபாதில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'இன்றைய சூழலில், நாட்டின் எல்லைகளில் ராணுவத்தினருக்கு பாதுகாப்பில்லை; விவசாயிகள் தற்கொலை முடிவை தேடிக் கொண்டிருக்கின்றனர். நமது மகள்களோ வீட்டில்கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளனர் என வருத்தம் தெரிவித்தார்..
இதுபோன்ற சூழலில் பிரதமர் மோடி வெளிநாடு செல்கிறார்' என குற்றம்சாட்டிய தொக்காடியா, இது போன்ற சம்பவங்களை கண்டிப்பதாக கூறினார்.