கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் இருவருக்கும் பதவி!!! - தூத்துக்குடி திமுகவில் இனியாவது தீருமா அதிகார சண்டை?
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மறைந்த என்.பெரியசாமியின் மகளும், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத ஈரம்பு மனிதராக திகழ்ந்தவர் எம்,பெரியசாமி. கருணாநிதியால் முரட்டு பக்தன் எனப் பெயர் பேற்ற பெரியசாமி அண்மையில் மரணமடைந்தார். அவர் உயிருடன் இருந்த வரை அவர் யாரை கைகாட்டுகிறாரோ அவருக்கே திமுக வில் பதவி கிடைக்கும்.
அவருடன் மோதிப்பார்த்து முடியாமல் அவரிடமே சரணடைந்தவர்தான் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ. பெரியசாமியுடன் ஏற்பட்ட தகராறில் மீண்டும் தனது தாய் கழகமான அதிமுகவுக்கு தூது விட்டார். ஆனால் அங்கிருந்து முறையான சிக்னல் கிடைக்காததால் திமுகவிலேயே தொடர்ந்து வந்தார்.
பெரியசாமியின் மகள் கீதா ஜீவன் தற்போது எம்எல்ஏவாக இருந்து வருகிறார். பெரியசாமியின் மறைவுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட திமுகவில் நிலவி வந்த குழப்பத்துக்கு இன்று முடிவு கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கீதா ஜீவனும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அனிதா ராதா கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக விவசாய அணிச் செயலாளராக சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.