மீண்டும் வேண்டும் எடப்பாடி... சொந்த மாவட்டத்திலேயே ஓ.பி.எஸை காண்டு ஏத்தும் ரத்தத்தின் ரத்தங்கள்...!
ஓபிஎஸ்சை முதல்வர் என குறிப்பிட்டு, தேனி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டிய நிலையில், தற்போது இபிஎஸ்சுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரானது அதிமுக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ்சை முதல்வர் என குறிப்பிட்டு, தேனி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டிய நிலையில், தற்போது இபிஎஸ்சுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரானது அதிமுக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை அமைச்சர்கள் இடையே மாறுபட்ட கருத்து நிலவியது. அப்போது, தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே அதிமுகவின் இலக்கு என துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ட்விட் செய்திருந்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கருத்து தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.
இந்நிலையில், தேனியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதை படித்த பின்னராவது திருந்தட்டும் எனும் தலைப்பில் அரசின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டுள்ளனர். தொடர்ந்து பட்டியலிட்டால் கணக்கிலடங்காது. மக்களின் முதல்வர் எடப்பாடியாரை குறை சொன்னால் நாக்கு அழுகி விடும்.
என்றும் எடப்பாடியாரோடு.. மீண்டும் எடப்பாடி.. வேண்டும் எடப்பாடி... இவண் நேதாஜி சுபாஷ் சேனை’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த போஸ்டரில் பெரிய அளவில் எடப்பாடி பழனிசாமி, சிறிய அளவில் ஓ.பன்னீர்செல்வம் படம் இடம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஓபிஎஸ்சை முதல்வர் என குறிப்பிட்டு, தேனி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது இபிஎஸ்சுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரானது, தேனி மாவட்ட அதிமுகவினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், கருப்பண்ணன் ஆகியோர் தலைமை உத்தரவை மீறி எடப்பாடியே அடுத்த முதல்வர் கூறி வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.