poster against selladurai all over madurai

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், குற்றவாளியான அவரை எப்படி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கலாம் என கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் பதவி காலியாக இருந்தது. 

அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகங்களில் கடந்த ஓராண்டாகவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளாகவும் துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கி வந்தன.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநர் மாளிகையில் நேர்காணல் நடைபெற்றது. 
இதையடுத்து சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்ழகத்தைப் பொறுத்தவரை துணை வேந்தர் பதவிக்கு பேராசிரியர்கள் செல்லதுரை, மரியஜான், பெருமாள்சாமி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

நேற்று நடைபெற்ற நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட செல்லதுரை இன்று அமைச்சர் அன்பழகனால் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்.

செல்லதுரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

செல்லதுரை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றியவர். தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டபோதே செல்லதுரைக்கு எதிராக மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பல்கலைக்கழக பாதுகாப்புக்கு குழு அமைப்பாளரை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்றதாக செல்லதுரை மீது வழக்கு பதவி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அவருக்கு எதிராக பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட தயாராகிவிட்டனர்.