”கமலின் உள்நோக்கம் தெரியாமல் எதுவும் சொல்ல மாட்டேன்” – பல்டி அடித்த பொன்ராதா…
கமலின் உள்நோக்கம் தெரியாமல் எதுவும் சொல்ல மாட்டேன் எனவும், அவரின் நிலை குறித்து அவர் தெளிவு படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, பீகார் மாநிலத்தை விட தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் உள்ளது எனவும், சிஷ்டம் சரியில்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கு தமிழகத்தின் ஆளும் கட்சி அமைச்சர்கள் பொங்கி எழுந்து தமது கருத்துகளையும் எச்சரிக்கைகளையும் கமலுக்கு விடுத்து வருகின்றனர்.
அதன்படி அமைச்சர்கள் அன்பழகன், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ஜெயக்குமார், சிவி சண்முகம், வேலுமணி என பல்வேறு அமைச்சர்களும் கமலஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போதாத குறைக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசையும், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் கமலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுரை விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கமலின் உள்நோக்கம் தெரியாமல் எதுவும் சொல்ல மாட்டேன் எனவும், அவரின் நிலை குறித்து அவர் தெளிவு படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.