"அறிவிப்பு வெளியிட எடப்பாடிக்கு அதிகாரம் இருக்கிறதா?" - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கேள்வி
முதலமைச்சர் அறிவித்த திட்டங்களை வெளியிட அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? தள்ளாடும் அரசு இது என்று திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் கூறியதாவது:
அறிவிப்புகள் பற்றி கருத்து கூறுவது இருக்கட்டும். முதலில் இவருக்கு அறிவிப்பு வெளியிட அதிகாரம் இருக்கிறதா என்று கேட்கிறேன். இவர்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் இன்று வழக்கை ஏற்றுகொண்டுள்ளது.
பல்வேறு பிரச்சனைகள் உள்ளது , உயர்நீதிமன்றமே விசாரணைக்கு ஏற்றுகொண்ட பிறகு இவர்களது ஆட்சி தள்ளாடும் ஆட்சி. இவருக்கு அறிவிக்க என்ன உரிமை இருக்கு.
மறைந்த முதல்வர் பெயரில் அம்மா பேரில் திட்டம் அறிவிப்பது தவறு. அவர் மறைந்து விட்ட பிறகு , அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அவரது பெயரில் திட்டங்கள் அறிவிப்பது குற்றம். குற்றவாளி பெயரை அரசு திட்டங்களுக்கு எப்படி பயன்படுத்த முடியும். முதலில் அவர் சுயேச்சையாக தன்னை நிருபித்துவிட்டு பின்னர் திட்டங்களை அறிவிக்கட்டும்.
சிறையில் இருக்கின்ற ஒருவரின் பினாமியாக இருக்கும் இவருக்கு எந்த தகுதியும் இல்லை. தைரியமிருந்தால் ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டியது தானே.
இவர்களை எந்த அளவிலும் மக்கள் ஏற்றுகொள்ளவில்லை. இவர்கள் அறிவிக்கும் திட்டம் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு பொன்முடி தெரிவித்தார்.