கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால் மரணம் தான் பதில்.. திமுகவை திமிறவிடாமல் அடிக்கும் இபிஎஸ்.!
வலைத்தளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையை கூறினால் ஜாமினில் வெளிவரா வழக்கு என திமுக ஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது. கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம் தான் பதிலாக கிடைக்கிறது.
பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்தவர் குப்புசாமி (36). இவர், சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தந்தை நந்தன், அதிமுக திருத்தணி 15-வது வட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, நந்தன் தமிழக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கியுள்ளார். அதில் இருந்த புளியில், இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததாகக் கூறப்படுகிறது. . இந்த விவகாரம் டி.வி., செய்திதாள்களில் செய்தியாக வெளியானது.
இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாகச் சொல்லி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக, நந்தன் மீது திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தனக்கு அவமானமாம் என்று கருதிய குப்புசாமி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில், படுகாயமடைந்த குப்புசாமியை திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குப்புசாமி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த குப்புசாமி குடும்பத்துக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை திரு.நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற திரு.குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும், தெரிவித்து கொள்கிறேன். வலைத்தளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம், உண்மையை கூறினால் ஜாமினில் வெளிவரா வழக்கு என திமுக ஆட்சியில் ஜனநாயகத்தை முடக்கும் முயற்சி தொடர்கிறது. கொடுங்கோல் ஆட்சியில் முறையான கேள்வி கேட்டால், மரணம் தான் பதிலாக கிடைக்கிறது. இது தற்கொலை அல்ல, ஜனநாயக படுகொலை என எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.