அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள்... சபாநாயகர் சகோதரரும் ஐக்கியம்...!
புதுச்சேரி மாநிலத்திற்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காரைக்காலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, இதனால் நாராயணசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில், முதலமைச்சர் நாராயணசாமி பிப்.22 அன்று சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று பொறுப்பு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் முன்மொழிந்த நாராயணசாமி, நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். புதுச்சேரியில் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துவந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.
நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காரைக்காலில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காரைக்காலில் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அமித் ஷா முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். மேலும் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரரான ராமலிங்கமும் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.