#BREAKING ஆளுநராக பதவியேற்ற முதல் நாளே அதிரடி... புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தமிழிசை உத்தரவு...!
இரு அணிகளிலும் தலா 14 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. அவருக்கு எதிராகவும், அவரை புதுச்சேரியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என முதல்வர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, பதவிப்பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு என்றார். தமிழ் புறக்கணிக்கப்படுவதில்லை, தமிழுக்கான அதிகாரம் என்றும் இருக்கும். துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணை புரியும் சகோதரியாக இருப்பேன் என்றும், புதுச்சேரி, தெலங்கானா என இரட்டை குழந்தைகளை கையாளும் திறன் மருத்துவரான தனக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
பதவியேற்ற முதல் நாளே புதுச்சேரி அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். இன்று பிற்பகல் எதிர்க்கட்சி தலைவர் ரெங்கசாமி, பாஜக மாநில தலைவர் மற்றும் அதிமுக தலைவர் ஆகியோர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என கடிதம் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து ஆளுநரின் அழைப்பை ஏற்று, தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி எதிர்க்கட்சிகளின் மனு குறித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில் வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்குள் புதுச்சேரி சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜ உத்தரவு பிறப்பித்துள்ளார். இரு அணிகளிலும் தலா 14 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.