தொண்டர்களை திமுக ஏமாற்றுகிறது.. எல்லா இயக்கங்களிலும் பயங்கரவாதிகள் ஊடுருவல்!! சரவெடியாய் வெடித்த பொன்னார்
எல்லா இயக்கங்களிலும் பயங்கரவாதிகள் ஊடுருவிவிட்டதாகவும், அவர்கள் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற முயல்வதாகவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தலித்துகளுக்காகவும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்திற்காகவும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் போராட்டம் நடத்தியதை, மேலாண்மை வாரியத்திற்காக போராட்டம் நடத்தியதாக முரசொலி பத்திரிகையில் வெளியிட்டு திமுக தொண்டர்களை ஏமாற்றுவதாக கூறினார்.
ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம், பிரதமருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் ஆகியவற்றின்போது சில தலைவர்கள் பேசிய வார்த்தைகள் தமிழர்களுக்கே அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய வார்த்தைகள்.
தற்போது எல்லா இயக்கங்களிலும் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களின் பெருமுயற்சியின் விளைவுதான் ஜல்லிக்கட்டு போராட்டம். இதை நான் எப்போது வேண்டுமானாலும் சொல்லுவேன். எல்லா இயக்கங்களிலும் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள், தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த நல்ல திட்டமும் வந்துவிடக்கூடாது என ஒரு கூட்டம் நினைக்கிறது என பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.