பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று திரண்ட அரசியல் கட்சிகள்; எல்லாப் பக்கமும் எதிர்ப்பை சம்பாதிக்கும் பா.ஜ.க...
திருப்பூர்
பா.ஜ.க-வினரின் செயலுக்கு கண்டனம் மற்றும் எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் கண்டனக் கூட்டம் நடைப்பெற்றது, இதில், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.
திருப்பூர் மாவட்டம், முத்தூர் சாலையில் மருத்துவமனை ஒன்றை வைத்துள்ளார் மருத்துவர் மு.கார்மேகன். இவர் தன்னுடைய மருத்துவமனையில் 'தமிழர்களை இந்தியா வஞ்சிக்கிறது' என்று வாசகம் எழுதி ஒட்டியிருந்தார்.
இதனைப் பார்த்த பா.ஜ.க திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் பொன்.ருத்ரகுமார், தன்னுடன் 20 பேரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குள் அதிரடியாய் புகுந்து அடாவடியாய் வாசகத்தை கிழித்தெறிந்தார். அதுமட்டுமின்றி, மருத்துவர் மு.கார்மேகனையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தனது ஆட்களை கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்.
பா.ஜ.கவின் இந்தச் செயலைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் பங்கேற்ற கண்டனக் கூட்டம் வெல்லுவாயலில் நடைப்பெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் வட்டச் செயலாளர் திருவேங்கடசாமி தலைமைத் தாங்கினார்.
இதில், இயற்கை வாழ்வுரிமை இயக்கப் பொறுப்பாளர் பொடாரன், திராவிடக் கழகக் கோவை மண்டல இளைஞரிணிச் செயலளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் ஜனநாயகப் பேரவை புரட்சிகர இளைஞர் முன்னணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. இதில் பல்வேறு அமைப்புகளும் பங்கேற்று பா.ஜ.க-வுக்கு எதிரான தங்களது கண்டனத்தைப் பதிவுச் செய்தனர்.