police protection to kamal house
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரசியல் வருகையை உறுதி செய்துவிட்ட கமல், கட்சி தொடங்கி நேரடி தேர்தல் அரசியலில் களமிறங்கும் பணிகளில் இறங்கியுள்ளார். இதற்கிடையே தமிழக அரசு மற்றும் மத்திய அரசை கமல் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். மேலும், மக்கள் பிரச்னைகள் குறித்தும் குரல் எழுப்பி வருகிறார்.
இந்நிலையில், வார இதழ் ஒன்றுக்கு எழுதிவரும் தொடரில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து கமல் விமர்சித்திருந்தார். ஆர்.கே.நகரில் ஆளும் தரப்பும் சுயேட்சை தரப்பும் போட்டி போட்டு கொண்டு வாக்காளர்களின் தலைக்கு விலை நிர்ணயம் செய்தனர். அதில், அதிகவிலை நிர்ணயித்த சுயேட்சை வெற்றி பெற்றுவிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு ஆகப்பெரிய ஜனநாயக அசிங்கம் என கமல் விமர்சித்து எழுதியிருந்தார்.
இதற்கு தினகரன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பதிலடி கொடுத்திருந்தனர்.
ஆர்.கே.நகர் வாக்காளர்களை கமல் இழிவுபடுத்திவிட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோவை கணபதி மணியக்காரன் பாளையத்தை சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மக்களிடம் மதிப்பும், மரியாதையும் ஏற்பட்டு உள்ளது. ஆனால் நடிகர் கமல்ஹாசன் திருடனிடம் பிச்சை எடுப்பது போன்ற ஒரு கேவலம் எங்கும் உண்டா என எனது கட்சிக்காரருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்து உள்ளார். இதனை பார்த்து எனது நண்பர்கள் என்னை கிண்டல் செய்கிறார்கள். இது மனவேதனை அளிக்கிறது. எனவே கமல்ஹாசன் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500, 501-ன்படி தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் வீட்டை இந்து பாதுகாப்பு அமைப்பினர், முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து கமலின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
