அடுத்த குறி ஊழியர்களுக்கு... கொத்தாக தூக்க கிளம்பும் தனிப்படை!? சென்னையில் பரபரப்பு...
நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதை அடுத்து, நக்கீரன் இதழில் வேலை செய்யும் உதவி ஆசிரியர்கள் மற்றும் துணை ஆசிரியர்களை கைது போலீஸ் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகிறது.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர் கைது செய்து சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. வந்த அவர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் துணை பேராசிரியரான நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழியில் செல்வதற்கு கட்டாயப்படுத்திய வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்மலா தேவி கைது தொடர்பாக நக்கீரன் இதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. ஆளுநரை தான் 4 முறை சந்தித்ததாக நிர்மலா தேவி வாக்குமூலத்தில் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தது. நக்கீரனில் வெளியான இந்த செய்தி குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். புனே செல்வதற்காக விமான நிலையம் சென்ற அவரை, 4 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் கைது செய்தது. பின்னர் நக்கீரன் கோபால், சிந்தாதரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பின்னர், நக்கீரன் கோபால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அவரை அழைத்து சென்றுள்ளனர்.
முன்னதாக, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பிறகு, நீதிமன்றம் கொண்டு செல்வதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட நிலையில், நக்கீரன் இதழில் பணியாற்றுபவர்களையும் கைது செய்ய போலீஸ் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நக்கீரன் கோபால் மட்டுமல்லாமல், அந்த இதழில் பணியாற்றும் பல ஊழியர்கள் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டு இருப்பதாக தெரிகிறது. சர்ச்சைக்குள்ளான அட்டைப்படத்தை வடிவமைத்தவர், புகைப்படர், நக்கீரன் இதழின் துணை ஆசிரியர் உள்ளிட்டவர்கட்ள மீது வழக்கு பதியப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இவர்கள் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.
நக்கீரன் இதழின் இணைய பிரிவு ஆசிரியர் வசந்த்தை போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் பற்றிய கட்டுரையை எழுதிய தாமோதரன் பிரகாஷையும் கைது செய்ய போலீசார் ஆரோசனை செய்து வருவதாகவும் தெரிகிறது.
சிலை கடத்தல், குட்கா ஊழல், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், துணை வேந்தர் நியமன லஞ்ச ஊழல் ஆகியவற்றை மறைக்கவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? நக்கீரன் கைது செய்யப்பட்டுள்ளதால், மற்ற பிரச்சனைகளை மழுங்கடிக்கும் செயலா? என்று பல்வேறு கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.