உங்களுக்குலாம் அனுமதி கிடையாது.. பாஜகவிற்கு முட்டுக்கட்டை போட்ட காங்கிரஸ்!! பதறி துடிக்கும் பாஜக
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். புதுச்சேரியின் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரத்தை மீறி துணை நிலை ஆளுநர் செயல்படுவதாகவும், அவர் மூலமாக புதுச்சேரியில் மறைமுகமாக பாஜக ஆட்சி செய்ய நினைப்பதாகவும் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். ஆட்சியாளர்களுக்கும் கிரண்பேடிக்கும் இடையே அதிகார போட்டி நீடித்து வந்தது.
இந்நிலையில், புதுவையில் பாஜகவை சேர்ந்த வி.சாமிநாதன், கே.ஜி.சங்கர், எஸ்.செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
3 நியமன எம்.எல்.ஏக்களின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன், திமுக நிர்வாகி தனலட்சுமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் நியமன எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என உத்தரவிட்டது.
பட்ஜெட் கூட்டத்தில் அவர்களை அனுமதிக்க முடியாது என பேரவை தலைவர் வைத்திலிங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் நகலை கடந்த வெள்ளிக்கிழமை, புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் வைத்திலிங்கம், பேரவை செயலாளர் வின்செண்ட் ராயர் ஆகியோரிடம் நியமன எம்.எல்.ஏக்கள் வழங்கினர். இன்று நடைபெறும் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தில் கலந்துகொள்வோம் என்று அன்றைக்கே நியமன எம்.எல்.ஏக்கள் சொல்லி சென்றனர்.
அதன்படி இன்று புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 நியமன எம்.எல்.ஏக்களும் தலைமை செயலகத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்ததால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. ஆனால் அவர்களை அனுமதிக்க போலீசார் உறுதியாக மறுத்துவிட்டதால், சட்டப்பேரவைக்கு வெளியே அமர்ந்து 3 நியமன எம்.எல்.ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புதுச்சேரி தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.