மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் துறைமுக பொறுப்பு கழகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என அறவழியில் போராடி வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு, எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
மாணவர்களின் அறப்போராட்டத்தில் தீயசக்திகள் ஊடுருவி இருப்பதாக, நான் முன்னதாகவே எச்சரிக்கை செய்தேன். அதேபோல், மாணவர்களின் போராட்டத்துக்கு, போலீசாரும் பொறுமை காட்டினர். இது பாராட்டுக்கு உரியது.

ஜல்லிக்கட்டு நடத்த, திமுக ஆட்சியில் அவசரச் சட்டம் கொண்டு வந்தபோது, ஜனாதிபதியின் ஒப்புதலை பெறவில்லை. அப்போதே பெற்றிருந்தால், அவசர சட்டம் தற்போது பயன் பெற்றிருக்கும்.
கடந்த 2016ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை செய்து மத்திய அரசு அறிக்கையை வெளியிட்டது. அப்போதே, மாநில அரசு தடை உத்தரவை பெற்றிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.

போராட்டம் நடைபெற்ற அவ்வளவு நாளும் பொறுமை காத்த காவல்துறை, இறுதியில் வன்முறையில் இறங்கியது ஏன்? குறிப்பாக வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கு யார் காரணம்? அது காவலர்களா அல்லது காவலர்கள் தோற்றத்தில் இருந்த சமூக விரோதிகளா? அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
