Asianet News TamilAsianet News Tamil

பாமக ஆட்சிக்கு வந்தால்தான் இதெல்லாம் நடக்கும்... தெறிக்கவிடும் டாக்டர் ராமதாஸ்..!

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும். பாமக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் இவை சாத்தியமாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Pmk will come to power... says Dr.Ramadoss
Author
Chennai, First Published Sep 17, 2020, 8:25 PM IST

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதிய சுக்கா... மிளகா... சமூகநீதி நூல் வெளியீட்டு விழா காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த விழாவில் பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் பேசுகையில், “சமூகநீதி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாம் எப்படியெல்லாம் ஏமாந்திருக்கிறோம்.... எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை இந்த புத்தகத்தை படித்த பிறகு நீங்கள் புரிந்து கொள்வீர்கள். சுக்கா...மிளகா... சமூகநீதி என்ற இந்த நூல் பைபிள், குரான், கீதை போன்ற நூல்களின் வரிசையில் போற்றப்பட வேண்டியது என்றும், வன்னியர்கள் அனைவரின் வீடுகளிலும் இந்த நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஆசிரியர் நெடுங்கீரன் போன்றவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த நூல் சமூகநீதிக்கான கட்டற்ற கலைக்களஞ்சியமாக, அதாவது என்சைக்ளோபீடியாவாக திகழும்.

Pmk will come to power... says Dr.Ramadoss
பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வியில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 27% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக பெரும் தடையாக இருப்பது கிரீமிலேயர் முறை ஆகும். அது மிகப்பெரிய அநீதி, அக்கிரமம். கிரீமிலேயர் முறை முழுமையாக நீக்கப்பட வேண்டும். கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியமும் சேர்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்ட போது, அதற்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தது நான்தான்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காக டெல்லியில் பல்வேறு போராட்டங்களையும் பாமக நடத்தியிருக்கிறது. மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 நிர்ணயிக்கப்பட்டு, அவற்றை எட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகள் மிகவும் ஆமைவேகத்தில் நடைபெற்று வருகின்றன. சமநிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். நமது நாட்டில் சமநிலையற்ற வளர்ச்சிதான் உள்ளது. சமூகநீதி இல்லாத வளர்ச்சிதான் நடைமுறையில் உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும் என்பது தான் நமது நோக்கம்.

Pmk will come to power... says Dr.Ramadoss
அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தியாவில் கடைசியாக ஆங்கிலேயர் ஆட்சியில் 1931-ம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி வன்னியர்கள்தான் தமிழகத்தின் தனிப்பெரும் சமுதாயம் ஆகும். தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய சமுதாயம் என்றாலும் அது வன்னியர் சமுதாயம்தான். தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய பகுதி என்றால் அது வன்னியர்கள் வாழும் பகுதிகள்தான் என்று சொல்லலாம். அதற்கு காரணம் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். வன்னியர் சமுதாயத்தை முன்னேற்ற தமிழ்நாட்டை ஆண்டவர்களும், ஆள்பவர்களும் என்ன செய்தார்கள்? என்பதை யோசித்துப் பார்த்தால் மிகவும் வேதனைதான் மிஞ்சுகிறது.
வன்னியர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் அதற்கு ஒரே தீர்வு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவதுதான். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்காமல் வன்னியர்களின் வாழ்நிலையை உயர்த்த முடியாது. தமிழ்நாட்டின் தனிப்பெரும் சமுதாயம் என்றால் அது வன்னியர்கள்தான். அவர்களுக்கு தனி இடப்பங்கீடு வழங்காமல் அந்த சமுதாயம் முன்னேற முடியாது.
தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் சமுதாயங்கள் தவிர மீதமுள்ள 81% விழுக்காட்டில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிய ஓர் ஆணையம் அமைத்து அறிக்கை பெற வேண்டும். வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தனியார்த்துறை வேலைவாய்ப்பில் 80% தமிழர்களுக்கு வழங்க வகை செய்யப்பட வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களில் சாதி அடிப்படையில் இடஓதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பிள்ளைகளுக்கு மட்டும் தான் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.Pmk will come to power... says Dr.Ramadoss
வன்னியர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து இந்தக் கருத்தைத்தான் நான் வலியுறுத்தி வருகிறேன். அந்தக் கருத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினருக்கும் அனைத்திலும் சமவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் சமவாய்ப்பு ஆணையம் (Equal Opportunity Commission) என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாட்டில் மிக மிக பின்தங்கிய நிலையில் ஏராளமான சமுதாயங்கள் உள்ளன. அந்த சமுதாயங்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும். கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை அரசே அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும். இங்கிலாந்து, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் அப்படித்தான் வழங்குகிறார்கள். அனைத்துத் தரப்பினருக்கும் முழுமையான சமூகப்பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவையெல்லாம் நடக்க வேண்டுமானால் பாமக ஆட்சிக்கு வர வேண்டும்.
இந்தியா விடுதலை அடைந்து 74 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இன்னும் முழுமையான சமூகநீதி கிடைக்கவில்லை. இடஒதுக்கீடு கோரி 10 ஆண்டுகளாக நாம் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினோம். ஆனால், அப்போதிருந்த ஆட்சியாளர்கள் நம்மை அழைத்து பேசுவதற்குக்கூட தயாராக இல்லை. இன்று வரை அதேநிலைதான் நீடிக்கிறது. வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். இந்தக் கோரிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நான், மருத்துவர் அன்புமணி, ஜி.கே.மணி போன்றவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதுகுறித்து இதுவரை அரசாங்கம் நம்மை அழைத்து பேசவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி நாம் கேட்டுக் கொண்டே இருப்பது?

Pmk will come to power... says Dr.Ramadoss
தமிழ்நாட்டில் மக்கள்தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை முன்னேறும். கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். தமிழக மக்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக வாழ வேண்டும். அதற்காக பாமக தமிழக மக்கள் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பான பல திட்டங்களை வைத்திருக்கிறார். அவற்றை தொகுதி அளவிலும், கிராம அளவிலும், வீடுவீடாகவும் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வதன் மூலம் மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.” என்று டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios