வன்னியர் அறக்கட்டளை சொத்துக்களை அபகரித்தாரா ராமதாஸ் ? பாமக அதிரடி விளக்கம் !!
மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவரும், அறக்கட்டளையை உருவாக்க எண்ணற்ற தியாகங்களை செய்தவருமான ராமதாசின் பெயரை வன்னியர் சங்க அறக்கட்டளைக்கு சூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் கேட்டுக் கொண்டதால் மாற்றப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் செயல்பட்டு வரும் வன்னியர் கல்வி அறக்கட்டளையின் பெயர் மருத்துவர் ராமதாஸ் அறக்கட்டளை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு வன்னியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வன்னிய மக்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை ராமதாஸ் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி இன்று விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் “ அறக்கட்டளை பெயர் மாற்றம் குறித்து ஊடகங்களிலும் , சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அவை அனைத்தும் உண்மைகளை மறைத்து, உள்நோக்கத்துடன் வெளியிடப்படுபவை என தெரிவித்துள்ளார்.
வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் ராமதாசின் கடுமையான உழைப்பால் உருவாக்கப்பட்டது .
இத்தகைய சூழலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவரும், அறக்கட்டளையை உருவாக்க எண்ணற்ற தியாகங்களை செய்தவருமான ராமதாசின் பெயரை அறக்கட்டளைக்கு சூட்ட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளும், அறக்கட்டளையின் அறங்காவலர்களும் கோரிக்கை விடுத்தனர். அதையேற்று மருத்துவர் இராமதாஸ் கல்வி அறக்கட்டளை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு அவர்களை கவுரவப்படுத்தும் வகையில், அறக்கட்டளையின் கீழ் சட்டக்கல்லூரி செயல்பட்டு வரும் பகுதிக்கு மாவீரன் ஜெ.குரு வளாகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதேபோல் தான் இப்போது அறக்கட்டளைக்கு ராமதாசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது மிகவும் சாதாரணமான நடைமுறை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜி.கே. மணி விளக்கம் அளித்துள்ளார்.
“அறக்கட்டளைக்கு ராமதாசின் பெயர் சூட்டப்பட்டுள்ள போதிலும், அதன் நிர்வாகத்தில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை; அவர் வேறு எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.. அந்த அறக்கட்டளையை அரும்பாடுபட்டு தொடங்கியவர் என்ற அடிப்படையில் அதன் நிறுவனராக மட்டுமே ராமதாஸ் செயல்பட்டு வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த உண்மைகளையும், அறக்கட்டளை குறித்த விதிமுறைகளையும் அறியாமல் கட்டுக்கதைகளை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் எழுதும் போக்கை சில முதன்மை ஊடகங்களும், சமூக ஊடகங்களும் கைவிட வேண்டும். மாறாக, உள்நோக்கத்துடன் திட்டமிட்டுஅவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்” என்றும் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.