மீண்டும் சட்டம் இயற்றினாலும் நீட் ரத்து செய்யப்படாது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வலுவான வாதங்களை முன்வைத்து வென்றால்தான் நீட் ரத்தாகும். 

 நமது எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு 3 விஷயங்கள்தான் தெரியும்... பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும், தீர்மானம் இயற்ற வேண்டும், எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் ஆகிய மூன்றும்தான் அந்த விஷயங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை கலாய்த்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


 நீட் விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இனியும் தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்யாமல் சட்டப்பேரவையைக் கூட்டி சட்டம் இயற்ற வேண்டும். தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துக்கொண்டு சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் அந்த அறிக்கையில் இருவரையும் கடுமையாகத் தாக்கி கருத்து தெரிவித்திருந்தார் மு.க. ஸ்டாலின்.
இந்நிலையில் மு.க. ஸ்டாலினின் கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 3 ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “நீட் விவகாரத்தில் கடித நாடகம் கூடாது. மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்... மீண்டும் சட்டம் இயற்றினாலும் நீட் ரத்து செய்யப்படாது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வலுவான வாதங்களை முன்வைத்து வென்றால்தான் நீட் ரத்தாகும்.
தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளில் நமது எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிந்தவை 3 விஷயங்கள்தான். 1. பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும், 2. தீர்மானம் இயற்ற வேண்டும், 3. எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும்!
உலகில் எந்த செயலும் தானாக நடக்காது. ஒவ்வொரு செயலும் நடக்க வைக்கப்படுகின்றன - ஜான் எஃப் கென்னடி என்று பதிவிட்டுள்ள ராமதாஸ், அதை ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவின் மூலம் மு.க. ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார் ராமதாஸ்.