தமிழகம் ரொம்ப எச்சரிக்கையா உஷாரா இருக்கணும்... திரும்ப திரும்ப எச்சரிக்கும் டாக்டர் ராமதாஸ்..!
இந்தியாவை கொரோனா இரண்டாவது அலை தாக்கும் ஆபத்து அதிகம் என்பதால், தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துவருகிறது. ஆனால், உலக அளவில் பிற நாடுகளில் குறைந்திருந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தினந்தோறும் அதிகரித்துவருகிறது. அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதேபோல இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குளிர்க் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பதால், இந்தியாவில் இரண்டாம் அலை குறித்த எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் பொதுமக்களுக்கு ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார். “உலக அளவில் கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 6.57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் மட்டும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவை இரண்டாவது அலை தாக்கும் ஆபத்து அதிகம். எனவே தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.