#JaiBhim நடிகர் சிவகுமார் ஒரு மனநோயாளி… அவர் பசங்களும் பைத்தியங்க… பாமக பிரமுகரின் வைரல் வீடியோ..
நடிகர் சிவகுமார் ஒரு மனநோயாளி…. அந்த குடும்பத்தில் பிறந்த சூர்யா பாமகவை இழிவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன என்று மயிலாடுதுறை பாமக பிரமுகர் சித்தமல்லி பழனிசாமி கூறி உள்ளார்.
மயிலாடுதுறை: நடிகர் சிவகுமார் ஒரு மனநோயாளி…. அந்த குடும்பத்தில் பிறந்த சூர்யா பாமகவை இழிவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன என்று மயிலாடுதுறை பாமக பிரமுகர் சித்தமல்லி பழனிசாமி கூறி உள்ளார்.
சென்னை மழை, மக்கள் திண்டாட்டம் ஆகிய சம்பவங்களை விட இப்போது பரபரப்பாக பேசப்படும் சம்பவம் ஜெய்பீம்… நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி இருக்கும் இந்த படம் பற்றிய செய்திகள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக ஜெய்பீம், நடிகர் சூர்யா, பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய பெயர்கள் ஊடகங்களில் பரவலாக பதியப்பட்டு வருகின்றன. பாமகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் நடிகர் சூர்யாவையும், ஜெய்பீமையும் ஆதரிக்கின்றன.
இருளர் இன மக்களை பற்றி பேசும் இந்த படம் அரசியல்வாதிகளை தாண்டி வெகுஜனங்களையும் பேச வைத்திருக்கிறது… படத்தை கொண்டாட வைத்து இருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எந்த பெரிய நடிகர்களும் நடிக்க யோசித்த ஒரு கதாபாத்திரத்தை நடிகர் சூர்யா ஏற்றுள்ளார் என்று பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
எந்த அளவுக்கு பாராட்டுகளை பெற்று இருக்கிறேதோ அதே அளவுக்கு பாமக தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகளை இந்த படமும், படத்தை இயக்கிய ஞானவேல், நடித்த சூர்யா ஆகியோர் சந்தித்து வருகின்றனர். அத்தனைக்கும் காரணம் படத்தில் கொடுமையான வில்லனாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் காவல்துறை அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என்பதும், அவரது வீட்டில் காலண்டர் ஒன்று வைக்கப்பட்டுள்ள காட்சிகளும் தான்.
பெரும் சர்ச்சைகள், போராட்டங்கள், பாமக தரப்பில் இருந்து எழுந்து வந்ததால் சர்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. அன்புமணி ராமதாசின் கண்டன அறிக்கைக்கு நடிகர் சூர்யா பதில் அளித்துவிட்டாலும் பிரச்னை முற்றுப்பெறவில்லை.
தினமும் ஏதாவது ஒரு வகையில் ஜெய்பீம், நடிகர் சூர்யா, பாமக என்ற முக்கோண வடிவத்தில் கண்டனங்கள், விளக்கங்கள் வெளியாகி வருகின்றன. அதில் ஒரு படி மேலாக, மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி நடிகர் சிவகுமார் ஒரு மனநோயாளி. இந்த மனநோயாளி குடும்பத்தில் இருந்த வந்தவர் நடிகர் சூர்யா என்று போட்டு தாக்கி உள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி சுகுணசிங்கிடம் அவர் தலைமையிலான பாமகவினர் ஒரு மனு ஒன்றை அளித்துவிட்டு வந்துள்ளனர். அந்த மனுவில் ஜெய்பீம் பட தயாரிப்பாளர், படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். பட்டியலின மக்களுக்கு எதிராக பாமக செயல்படுவதை போன்று காட்சிகள் சித்தரிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.
இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள விவரம் வருமாறு: சூர்யாவின் குடும்பத்துக்கு வன்னியர்கள் எதுவும் துரோகம் பண்ணல. அதே சமயத்தில் அவர்கள் தான் (நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்) தீண்டாமையை கடைபிடித்து உள்ளனர்.
ஜான்பாண்டியனிடம் ஒரு முறை போட்டோ எடுக்கக் கூடாது என்று தீண்டாமையை கடைபிடித்தவர். தீண்டாமையே அவர்கள் வீட்டில்தான் இருக்கிறது. அந்த நடிகர் சிவகுமார் ஒரு மனநோயாளி.
காலையில் ஒன்று மாலையில் ஒன்று என பேசுவார். அந்த மாதிரி குடும்பத்தில் பிறந்த இந்த சூர்யா வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தி பேச வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
அவருடைய படத்தை எந்த தியேட்டர்களிலும் ரிலீஸ் பண்ண விடமாட்டோம். அவர் இந்த பகுதியில் எங்க வந்தாலும் அவரை(நடிகர் சூர்யா) முதலில் எட்டி உதைக்கிற ஒரு இளைஞனுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் மயிலாடுமுறை பாமக தரும் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது.