அதிமுகவின் தோல்விக்கு பாமகவும், சசிகலாவும்தான் காரணம்... அன்வர் ராஜா அதிரடி..!
மாநிலத்தில் காலூன்ற பா.ஜ.க முயற்சிப்பதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை. ஆனால் அதற்கு அதிமுக இடம் கொடுக்கக் கூடாது.
மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து அதிமுக பாடம் கற்றுக் கொள்ளவில்லை என நினைக்கிறேன் என அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் சிறுபான்மையினர் பிரிவு செயலாளரும், முன்னாள் தொழிலாளர் அமைச்சரும், ராமநாதபுரம் முன்னாள் எம்.பி.யுமான அ.அன்வர் ராஜா, எடப்பாடியின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து வருகிறார். 2019 மக்களவை மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. சசிகலா திரும்பி வருவதை ஆதரித்தாலும், கட்சியின் முடிவுக்கு தான் கட்டுப்படுவேன் என்று கூறுகிறார்.
‘’கட்சி எதையும் கற்றுக்கொண்டதாக நான் நினைக்கவில்லை. கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைப் பொறுத்தவரை, கட்சி சரியான கூட்டணியை அமைக்கவில்லை. அந்த விஷயத்தில் எந்த மறுபரிசீலனையும் செய்யவில்லை. மக்களவை தேர்தலில், 2014ல் 37 இடங்களை கைப்பற்றிய கட்சி, 2019ல் தோல்வியை தழுவியது பற்றிய ஆழமான விவாதம் இல்லை. 2021ல் அந்த போக்கு தொடர்ந்தது. அதே கூட்டணியை தக்க வைத்துக்கொண்டது தவிர, கட்சி இரண்டு முறை பின்னடைவை சந்தித்தது. வன்னியர்களின் முழு ஆதரவையும் நாங்கள் பெறவில்லை.
அவர்களுக்கு 10.5% ஒதுக்கீடு வழங்கப்பட்டது. புதிய ஒதுக்கீடு, தென் மாவட்டங்களில் பிரச்சாரம் அதிமுகவின் வாக்குகளை சிதைத்தது. வட மாவட்டங்களில், மற்ற சமூகத்தினரும், எங்களுக்கு எதிராக திரும்பினர். பட்டியலிடப்பட்ட சாதியினர் மத்தியில் கட்சி அடித்தளமும் அடிபட்டது.
மாநிலத்தில் காலூன்ற பா.ஜ.க முயற்சிப்பதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை. ஆனால் அதற்கு அதிமுக இடம் கொடுக்கக் கூடாது. பாஜக எங்கள் மீது சவாரி செய்ய அனுமதித்ததற்காக மக்கள் எங்கள் மீது குறைகளை கூறி வருகின்றனர். ஆனால், பாஜக வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. மேலும், அதனுடன் கூட்டணி வைத்ததால், எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. நாங்கள் எங்கள் வாக்குகளை மட்டுமே இழந்தோம்.
சசிகலா எங்களுடன் இருந்திருந்தால் கட்சி இன்னும் 20 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். மேலும் 40 இடங்கள் கிடைத்திருக்கும். ஏனெனில் அவரது வருகையும், பிரச்சாரமும் அதிமுக மீண்டும் இணைந்தது என்ற செய்தியை அனுப்பியிருக்கும்.
சசிகலா மீது 2017-19 இல் வெறுப்பு இருந்தது. ஆனால் அது படிப்படியாக குறைந்தது. இப்போது அவர் மீது அனுதாபம் வந்துவிட்டது. அவரது குடும்பத்தினரின் ஆதிக்கம் மீண்டும் இருக்கும் என்று நான் நம்பவில்லை. அவர் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த குறுகிய காலத்தில், அரசாங்கத்தில் அதிகாரப் பதவிகளைப் பெற்றவர்கள், டி. ஜெயக்குமார் நிதித் துறையை வகித்தவர்.கே.ஏ. செங்கோட்டையன் பள்ளிக் கல்வி அமைச்சரானார். அவர்கள் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இது சசிகலாவின் அணுகுமுறையைக் காட்டியது, இது தொடரும் என்று நம்புகிறேன்.
டி.டி.வி. இப்போது எங்கள் கட்சியில் இல்லை. அவர் அமமுகவில் இருக்கிறார். தவிர, அவர் தற்போதைய விவாதப் பொருளல்ல'' என அவர் தெரிவித்தார்.