‘இது நடந்தால் அது திமுக அரசுக்கு தீராப்பழியை ஏற்படுத்தும். திமுக அரசு இதை செய்தே ஆக வேண்டும்’ என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஆயுதபடையில் பணிபுரிந்து வந்த சரவணகுமார் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவு பணத்தை இழந்ததால் சரவணகுமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட சரவணகுமாருக்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உயிரை கொல்லும் சூதாட்டத்திற்கு அரசு உரிய தடையை கொண்டு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'சென்னை அம்பத்தூரில் மத்திய அரசு அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காவலர் சரவணக்குமார் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதாகவும், அதில் பெரும்பணத்தை இழந்து லட்சக்கணக்கில் கடனாளியானதாகவும், அதிலிருந்து மீள முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது.

இதை விட பெருங்கொடுமை இருக்க முடியாது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, கடந்த 9 மாதங்களில் 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு உயிரிழப்பும் மனதை கலங்கச் செய்கிறது. ஆனால், அரசோ உயிரிழப்புகளை தடுக்கத் தவறுகிறது! தமிழ்நாட்டில் இனியும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிரிழக்கக்கூடாது. அவ்வாறு நடந்தால் அது திமுக அரசுக்கு தீராப்பழியை ஏற்படுத்தும். எனவே, இனியும் மேல்முறையீட்டை நம்பிக்கொண்டிருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்! " என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஒரு வழியா பாஜக வழிக்கு வந்த திமுக.. பட்டின பிரவேசத்திற்கு நானும் வரேன்.! கெத்து காட்டும் அண்ணாமலை !

இதையும் படிங்க : "இந்து சக்தி.. அடிபணிந்த அரசு..!" ஆதீன விவகாரத்தில் மார்தட்டும் ஹெச். ராஜா