TN BJP : திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.பிரதமர் மோடியால் கச்சத்தீவை மீட்கும் காலம் வரும். என்று பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திரமோடியின் 8 ஆண்டு சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ ஊழல் இல்லாத ஆட்சி 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் இல்லாத நிலை உள்ளது. ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கியதுதான் அவரது சாதனை. நிலையான ஆட்சியை நாட்டுக்கு வழங்கிய பிரதமர் மோடி மட்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால், நம்முடைய நிலை பெரும் பாதிப்பை சந்தித்திருக்கும்.

குடும்ப ஆட்சி என்பது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமே இலங்கைதான். திமுக ஒரு பலமில்லாத கட்சியாக திகழ்ந்து வருவதால்தான், தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சி நடத்தி விடலாம் என நம்புகிறது. இளைஞர்களை அதிகம் கவர்ந்த கட்சியாக பாஜக இருந்து வருகிறது. குறிப்பாக அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு குழந்தைகளும், இளைஞர்களும் பாஜகவின் ஆதரவு நிலைக்கு வந்துள்ளதுடன், பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்துவருகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கச்சத்தீவை தாரை வார்த்தது அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியும், முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியும்தான். ஆனால் தற்போதைய திமுக அரசு கச்சத்தீவை மீட்போம் என வாக்குறுதி கொடுக்கிறது.

அவர்களால் கச்சத்தீவை மீட்க முடியாது. பிரதமர் மோடி மனது வைத்தால்தான் கச்சத்தீவை மீட்க முடியும். கச்சத்தீவை மீட்கும் காலம் வரும். தொடர்ந்து நீடிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி இன்னும் 80 ஆண்டுகளானாலும் தொடர்ந்து நீடிக்கும்’ என்று பேசினார்.
இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?
இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?
