6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை... மு.க.ஸ்டாலின் பங்கேற்பு...!
கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என விஞ்ஞானிகள் எச்சரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று குறையாத மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா 2வது அலை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கியது. உயிரிழப்புகளும், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் புதிய உச்சம் தொட்டு வந்தது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகளற்ற ஊரடங்கின் பலனாக தற்போது கொரோனா 2வது அலையின் தீவிர கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட தமிழகம் கருப்பு பூஞ்சை, டெல்டா பிளஸ் வைரஸ் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இருப்பினும் முறையான நடவடிக்கைகள் காரணமாக அவையும் கட்டுக்குள் இருப்பதாக தெரிகிறது. தற்போது 3வது அலையே வந்தாலும் சமாளிக்க தயார் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சவால் விடும் அளவிற்கு தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் அலட்சியப்படுத்தி வருவதால் 3வது அலை தாக்க கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நிலைமையை சமாளிப்பது குறித்து கடந்த செவ்வாய் கிழமை 8 வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று கொரோனா பரவல் குறையாத மாவட்டங்களைக் கொண்ட மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய முதலமைச்சர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி உடனான ஆலோசனை கூட்டத்தில் இணைந்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பூசி செலுத்தப்படுவது போன்றவை குறித்து பிரதமர் மோடி முதலமைச்சர்களிடம் கேட்டறிந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.