PM Modi : இந்தியாவின் நிரந்தர பிரதமர் மோடியா..? ஜெயலலிதாவை உதாரணம் காட்டிய கார்த்தி சிதம்பரம்..!
பஞ்சாப் மாநில தேர்தலையொட்டி அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை போன்ற சோதனைகளை பாஜக தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளை முடக்க பாஜக திட்டமிடுகிறது.
இந்தியாவின் நிரந்தர பிரதமராக மோடி இருக்க முடியாது என்று என்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்,.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் என 3 மாநில வாகனங்கள் டெல்லி அணிவகுப்பில் பங்கேற்கவில்லை. இதற்காக அவர்கள் ஏன் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு எதுவும் இல்லை. கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சியில் இருப்பதால் இதுபோன்று செய்கிறார்கள். பஞ்சாப் மாநில தேர்தலையொட்டி அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை போன்ற சோதனைகளை பாஜக தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளை முடக்க பாஜக திட்டமிடுகிறது. இது ஆளும் பாஜகவின் வழக்கமான ஒன்றுதான்.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவிலிருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாற்று கட்சிக்குத் தாவுகிறார்கள். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்குக் காட்சி மாறுவது மியூசிக்கல் சேர் போன்று வழக்கமாகிவிட்டது. கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்புவது தேவையற்றது. கொரோனா தடுப்பூசியைக் கட்டாயம் செலுத்திக் வேண்டும். ஆஸ்திரேலியாவில் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கொரோனா ஊசி செலுத்தாதனால் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் பிரான்சிலும் அது நடைமுறைக்கு வந்துள்ளது.கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது.
தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நான் கொரோனா இரு தவணைகளையும் எடுத்துக்கொண்டேன். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது. மருத்துவம் சார்ந்த துறைகளில் கேள்வி கேட்கக் கூடாது என்பது பொதுவான நடைமுறை.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். மேலும் மோடிதான் நிரந்தர பிரதமர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கூறியது பற்றி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “நிரந்தரம் என்பது இங்கு எதுவுமே இல்லை. ஏற்கெனவே அவர்கள் நிரந்தரம் (ஜெயலலிதா) என்று கூறியது, நிரந்தரம் இல்லாத நிலைதான் ஏற்பட்டது. இதேபோல் ''மோடி எங்கள் டாடி'' என்று கூறியவர்கள் தற்போது ''நிரந்தர பிரதமர்'' எனவும் கூறுகிறார்கள். இதுவும் நிரந்தரமில்லை.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.