தயவு செய்து தமிழக மக்களின் உயிர்களை காப்பாற்றுங்கள்.. ரெம்டெசிவீர் மருந்துக்காக மத்திய அரசிடம் கதறிய எம்.பி.
மருந்து வாங்குகிற வரிசை மிக நீண்டதாக உள்ளது. எண்ணிக்கை 250 பேரைக் கடக்கிறது. இந்த இடைவெளி இன்னும் விரிவடைந்ததால் என்ன ஆகும் என்ற கவலை மனதைக் கவ்வுகிறது. விளைவுகள் மிக மோசமானதாக அமையும்.நேரம் கடுகி ஓடுகிறது. முடிவுகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வரின் அவசர கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் கொரோனாவில் போராடும் உயிர்களை காப்பாற்றுங்கள் என மத்திய அரசை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஏற்கனவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை மேற்கோள்காட்டி, உடனே முதல்வரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்த அதே புயூஷ் கோயலுக்கு வெங்கடேசன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
தமிழக முதல்வர் இரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இடம் ஓர் அவசரக் கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். ஒரு நோயாளிக்கு 6 குப்பிகள் வீதம் 1166 நோயாளிகளுக்கு மட்டுமே கொடுக்ககூடிய ரெம்டெசிவீர் மருந்தை ஒன்றிய அரசு அளிக்கிறது. இந்த தினசரி அளவை 3 மடங்காக உயர்த்தகோரியுள்ளார். தின அளிப்பை 7000 லிருந்து 20000 ஆக உயர்த்துமாறு கோரியுள்ளார். நெஞ்சகப் பிரச்சினை உள்ள நோயாளிகளுக்கு அவசரமாய்த் தேவைப்படும் மருந்து. தேவைக்கும் அளிப்பிற்குமான இடைவெளி மிகப் பெரிதாக உள்ளது.
தமிழகத்தின் தேவை பற்றி முதல்வர் கூறுவதற்கு நான் கள சாட்சியத்தை மதுரையில் காண்கிறேன்.மதுரைக்கு தின அளிப்பு 500 மட்டுமே. ஒரு நோயாளிக்கு ஆறு குப்பிகள் வீதம் தினமும் 80 நோயாளிகளுக்குகே போதுமானது. ஆனால் மருந்து வாங்குகிற வரிசை மிக நீண்டதாக உள்ளது. எண்ணிக்கை 250 பேரைக் கடக்கிறது.இந்த இடைவெளி இன்னும் விரிவடைந்ததால் என்ன ஆகும் என்ற கவலை மனதைக் கவ்வுகிறது. விளைவுகள் மிக மோசமானதாக அமையும். நேரம் கடுகி ஓடுகிறது. முடிவுகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும். முதல்வரின் கோரிக்கையை உடன் நிறைவேற்ற வலியுறுத்தி ஒன்றிய அரசின் அமைச்சர்கள் பியூஷ் கோயல் (ரயில்வே மற்றும் வர்த்தகம்) ஹர்ஷ வர்தன் (சுகாதாரம்) ஆகியோருக்கு இவ்வாறு கடிதங்களை அனுப்பியுள்ளேன். என வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.