குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்.. அடுத்தடுத்து அடிச்சுத்தூக்கும் ஸ்டாலின் அரசு.!
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக 13 மளிகை பொருட்களை நிவாரணமாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாது அலை நாளுக்கு நாள் தீவிரமாகிவருகிறது. தமிழகத்தில் தற்போது தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழக அரசு, மே 10 முதல் முழு ஊரடங்கை அறிவித்தது. இந்த ஊரடங்கு மே 24-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதற்கு பின்பும்கூட ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக தற்போது ரூ.2 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி கோதுமை 1 கிலோ, உப்பு 1 கிலோ, ரவை 1 கிலோ, சர்க்கரை 500 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், புளி 250 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், குளியல் சோப்பு 1, துணி துவைக்கும் சோப்பு 1, மிளகு சீரகம் உட்பட கிட்டத்தட்ட 13 வகையான பொருட்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் 2.11 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டத்தை திமுஅ அரசு கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திட்டம் ஜூன் 3 தேதி முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்த நாள் அன்று தொடங்கப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.