அண்ணா அறிவாலயத்தில் பிள்ளையார் சிலை வையுங்கள்.. திமுகவை வம்பிழுக்கும் ராம ரவிக்குமார்.
தேர்தல் சமயத்தில் ஒரு கோடி இந்துக்கள் இருக்கிறார்கள் என்று சொன்னீர்கள் ! அந்த இந்துக்களை திருப்திப்படுத்த அண்ணா அறிவாலயத்தில் மற்றும் தங்களது இல்லத்தின் முன்பு பிள்ளையார் வைத்து கொழுக்கட்டை சுண்டல் அப்பம் பொரி அவல் கடலை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.
தமிழக முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்! தமிழக முதல்வராக தாங்கள் பதவியேற்ற பிறகு தனக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்தாவர்களுக்கும் சேர்த்து நன்றி தெரிவித்தீர்கள். அனைவருக்கும் பொதுவான முதல்வராக எந்தவிதமான பாரபட்சமின்றி நடந்து கொள்வேன் என்று உறுதி அளித்தீர்கள்.கடவுள் மறுப்பு நாத்திகக் கொள்கை என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை என்று இன்றளவும் முழங்கிக் கொண்டிருக்கும் ஈவேராவின் வாரிசுகள் என்று தாங்கள் சொன்னாலும்; தேர்தல் நேரத்தில் திமுகவில் ஒரு கோடி இந்துக்கள் இருக்கிறார்கள் நாங்கள் ஒன்றும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்று சொல்லியதை நினைவூட்டுகிறேன். விநாயகர் சதுர்த்தி திருவிழா தமிழகத்தில் ஒரு மக்கள் விழாவாக மாறி அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து அதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் இல்லை, "கொரோனா வென்றான்"என்று பாராட்டுச் சான்றிதழ் பெறக்கூடிய தாங்கள்யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த முரட்டு பிடிவாதம் என்று தெரியவில்லை. விநாயகர் திருவிழா என்பது ஒரு மதப் பண்டிகை மட்டுமல்ல ;
லட்சக்கணக்கான மண்பாண்ட சிலை தயாரிப்பு கைவினைதொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினை.சிறு-குறு வியாபாரிகளின் பொருளியல் சார்ந்த வாழ்வாதாரப் பிரச்சினை. இதை தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களை மிரட்டி அச்சுறுத்துவது தயாரிக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளை பறிமுதல் செய்வது என்பதெல்லாம் இந்த அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை உருவாக்கும் என்பதை தாங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
அனைத்து மத கோவில்களையும் வாரத்தில் மூன்று நாட்கள்மூடுகிறோம் என்று அரசு உத்தரவு போட்டாலும் அதை 100 க்கு 100 சதவீதம் மதித்து நடப்பவர்கள் இந்துக்கள் மட்டும்தான் என்பதை தாங்கள் புரிந்து கொள்ளுங்கள். பக்ரீத் கிறிஸ்துமஸ் ரம்ஜான் இப்படி பிறமத சகோதரர்கள் கொண்டாடும் விழாக்களுக்கு திமுக தலைவராக, தமிழக முதல்வராக தாங்கள் வாழ்த்து சொல்வதும்,விழாக்களில் கலந்து கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளீர்கள்.ஆனால் இந்துக்கள் கொண்டாடக்கூடிய பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் தவிர்ப்பதும், இந்துக்களின்பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதும் உங்களுடைய நடுநிலை தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விநாயகர் சதுர்த்தி ஸ்ரீராமநவமி தைப்பூச திருவிழா இப்படி இந்து பண்டிகைகளுக்கு தாங்கள் வாழ்த்து சொல்லியதாக நினைவிருந்தால் அதை சொல்லுங்கள் நான் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். ரம்ஜான் நோன்பு சமயத்தில் இஸ்லாமிய மக்களோடு குல்லாஅணிந்து நோன்பு கஞ்சி குடித்து இஸ்லாத்தின் பெருமை குறித்து பேசுவீர்கள்! கிறிஸ்துமஸ் பெருவிழா சமயத்தில் கேக் வெட்டி பாதிரியார்கள் ஊட்டிவிட மறுக்காமல் தாங்கள உண்டு மகிழ்வீர்கள் ! ஆனால் இந்துக்கள் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று சூழல் வந்தால் நாங்கள் கடவுள் மறுப்பாளர்கள் பிள்ளையாரும் வைக்க மாட்டோம் பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம் என்று வசனம் பேசுவீர்கள்!
மசூதி சர்ச் செல்லக்கூடிய தாங்கள் இந்து கோவில் மட்டும் வர மறுப்பது ஏன்?அன்னைத் தமிழ் வழிபாடு அர்ச்சனை என்று "இந்து ஆலயங்களை மட்டும் தங்கள் மொழி அரசியல் களமாக மாற்ற முயற்சிக்கும் தாங்கள்; மசூதி, சர்ச்-சை மட்டும் லாவகமாய் மறந்து விடுவது ஏன்? என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். "ஒன்றிணைவோம் வா" என்று செயல்திட்டம் வகுத்து தாங்கள் காணொளியில் பேசியபொழுது திமுக பிரமுகர்சொன்னார். தலைவரே! இந்த இந்து இயக்கங்கள் எல்லாம் பிள்ளையார் சிலை வைத்து கொண்டாடுகிறார்கள். நாமும் எல்லா திமுக கிளைகளிலும் பிள்ளையார் வைத்து கொண்டாட வேண்டும்.அதற்கு "திராவிட பிள்ளையார்" என்று பெயரிட வேண்டும் என்று சொன்னார் அதை நினைவூட்ட விரும்புகிறேன். தேர்தல் சமயத்தில் ஒரு கோடி இந்துக்கள் இருக்கிறார்கள் என்று சொன்னீர்கள்!
அந்த இந்துக்களை திருப்திப்படுத்த அண்ணா அறிவாலயத்தில் மற்றும் தங்களது இல்லத்தின் முன்பு பிள்ளையார் வைத்து கொழுக்கட்டை சுண்டல் அப்பம் பொரி அவல் கடலை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.தேவையெனில் பிள்ளையார் திருமேனி தருவதற்கு தயாராக இருக்கிறோம். திமுக அப்படி செய்தால் கூட்டணி கட்சியினரும் கூட்டணி தர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக "மதசார்பற்ற பிள்ளையார்" கொண்டாட்டம் தமிழகம் முழுக்க கொண்டாடுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும். சிலை வணங்கினால் முட்டாள்தனம் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லிய ஈவேராவுக்கு 140 அடியில் சிலை வைக்கும் திராவிடர் கழகம் வீரமணி போன்றவர்கள் திராவிட பிள்ளையாரை வணங்குவார். சுண்டல் கொழுக்கட்டை பிரசாதங்கள் இருக்க நாம் ஒன்றும் கவலைப்பட தேவையில்லை. விநாயகன் என்றாலே புத்தர் பெயர்தான் என்று புது விளக்கம் கொடுத்து விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் சமூகநீதி பிள்ளையார் சமத்துவ பிள்ளையார் என்று ஏதாவது பெயர் வைத்து கொண்டாடுவார்.
தமிழகத்தில் பள்ளி கல்லூரி மெரினா கடற்கரை வணிக வளாகங்கள் பேருந்துகள் மற்றும் இயல்பான வாழ்க்கைக்கு மக்கள் அதிகமாக சென்று கொண்டிருக்கும் சூழலில் பிள்ளையார் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தை தடுக்க வேண்டாம். நிபந்தனைகளுடன் கூடியவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். வீண் பிடிவாதத்தால் இந்து மக்களிடம் வெறுப்புணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம். தமிழக அரசு தங்கள் முடிவை மாற்றி தமிழக மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்று நம்புகிறோம். அனைவரின் நலத்திற்கும் என்னுடைய பிராத்தனைகள்! என அந்த கடித த்தில் கூறப்பட்டுள்ளது.