ஓட்டு வங்கி அரசியலுக்காக எத்தனை பேரை கொன்று குவிச்சீங்க... மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி..!
அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? என்று மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? என்று மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், மத்திய மற்றும் மாநில அரசுகளை அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், பியூஸ் மானுஷ் பொருளாதார மந்த நிலை மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்தும், தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவது பற்றியும் பாஜகவினரிடம் கேள்வி கேட்க உள்ளதாக முகநூலில் பதிவிட்டிருந்தார். அதன்படி, சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு விவாதம் செய்வதற்காக சென்றார். அப்போது செருப்பு மாலை அணிவித்து, பியூஸ் மானுஷ் கடுமையாக தாக்கப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அவரது டுவிட்டர் பக்கத்தில் பாஜக அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன் வைத்து விவாதித்த சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் 50-க்கும் மேற்பட்டவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை டுவிட்டரில் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், அடுத்தகட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா, காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதுதான் சமூக செயல்பாடா? சமூக அமைதி சீர்குலைப்பா? சமூக ஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம். இதையே அறிவாலயம் அனுமதிக்குமா? என மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அன்று யாரோ எங்கேயோ பேசியதற்காக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தேடி வந்து வாசலில் இருந்த பெண் தொண்டர்களையும், என்னையும் மற்றும் காவலர்களையும் காயப்படுத்தி தாக்கியது திமுக என்பது கடந்தகால வரலாறு ஆகும்.
சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் வெள்ளையப்பன் போன்ற அப்பாவி பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் வெட்டி சாய்த்தும் கோவையில் குண்டு வைத்து கொலைவெறி தாண்டவமாடிய பாவிகளுக்கும் ஓட்டு வங்கி அரசியலுக்காக பரிந்து பேசும் திமுகதான். மதுரையில் தினகரன் அலுவலகத்தில் அப்பாவி பத்திரிக்கையாளர்களை கொன்றதும் திமுகதான். தங்கள் குடும்பத்திற்குள் நடைபெற்ற பதவி கெளரவம் பற்றிய வம்புச்சண்டைக்காக உயிர் பலி வாங்கியதையும் தமிழகம் நினைவு கூறும் என மு.க.ஸ்டாலினை தமிழிசை கிழித்து தொங்கிவட்டார்.