சசிகலாவின் ஆதரவாளர்களிடமே ஆட்டைய போட்ட பலே திருடர்கள்… போலீஸிடம் புலம்பிய தொண்டர்கள்.!
ஆயிரக்கணக்காணோர் திரண்டிருந்ததை பயன்படுத்து சேப்படி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
ஆயிரக்கணக்காணோர் திரண்டிருந்ததை பயன்படுத்து சேப்படி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்ற அவரது தோழி சசிகலா, கண்ணீர் மல்க மரியாதை செய்தார். அதிமுக-வினரை மிரட்டும் வகையில் சசிகலாவிற்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தியாகராயர் நகரில் சசிகலா புறப்பட்டதில் இருந்து மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் வரை ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு போக்குவரத்தையே ஸ்தம்பிக்கச் செய்தனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க மரியாதை செய்தபோதும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் முண்டியடித்தனர். அவர்களை மீறி அண்ணா சமாதிவரை கூட செல்ல முடியாமல், அதற்கும் சசிகலா காரிலேயே புறப்பட்டுச் சென்றார். இந்த பெருங்கூட்டத்தை மெரினாவில் சுற்றிய பிக்பாக்கெட் திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளனர்.
மெரினா கடற்கரையில் குவிந்த சசிகலா ஆதரவாளர்கள் 20 பேரிடம் இருந்து 93 ஆயிரம் ரூபாய் ரொக்கம், விலை உயர்ந்த 5 செல்போன்களை பிக்பாக்கெட் திருடர்கள் திருடிச்சென்றுள்ளனர். பணம், மொபைல் போன்களை பறிகொடுத்த சசிகலாவின் ஆதரவாளர்கள் பதறியடித்துக்கொண்டு அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் பிக்பாக்கெட் திருடர்களை தேடி வருகின்றனர். இது பிக்பாக்கெட் திருடர்களின் கைவரிசைதானா அல்லது கூட்டத்தில் இருந்த சக தொண்டர்களே ஆட்டைய போட்டார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.