"காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க பாஜக முயற்சிக்கிறது" - குமுறித் தள்ளிய பீட்டர் அல்போன்ஸ்
ரெய்டு அடிப்பதன் மூலம் காங்கிரஸ் தலைவர்களை முடக்க நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது என தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இந்த ரெய்டுக்கெல்லாம் காங்கிரஸ் பயப்படாது என தெரிவித்தார்.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அதற்கு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 90 லட்சம் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் இருவர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
ரெய்டு நடைபெற்று வரும் நுங்கம்பாக்கம் சிதம்பரத்தின் வீட்டுக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நிதி அமைச்சரின் வேலையே அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிப்பதுதான்.
சிதம்பரம் அவரது பணியை நியாயமாகவும் ,நேர்மையாகவும் செய்துள்ளார். ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் மீது பாஜக அவதூறு பரப்பி வருவதாக அவர் குற்றச்சாட்டினார்.
சிபிஐ மூலம் ரெய்டு நடத்தி காங்கிரஸ் தலைவர்களை முடக்க பாஜக நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது என்றுட் அவர் கூறினார். சிதம்பரத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தவே பாஜக இந்த ரெய்டு நடத்தி வருவதாகவும் பீட்டர் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக தெரிவித்த பீட்டர் அல்போன்ஸ் அது ஒருபோதும் நடக்காது என உறுதிபடத் தெரிவித்தார்.