சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி... தமிழக அரசு அறிவிப்பு..!
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் பொது பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் பொது பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் பேருந்துகள் இயக்கலாம் எனபரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும், இந்த 4 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவில்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர். நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரயில் போக்குவரத்து, 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
மற்ற மாவட்டங்களான அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.