பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் - 9 பேர் கைது!
பன்றிக்கு பூணூல் போடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விலங்குகளை துன்புறுத்தியது, தடையை மீறி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, ராயப்பேட்டையில், பெரியார் திராவிட கழகத்தினர், ஆவணி ஆவிட்டத்தை முன்னிட்டு பன்றிகளுக்கு பூணூல் அணிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
இன்று ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூணூல் அணிபவர்கள் இன்று கோயில்களுக்கு சென்று, ஒரு குழுவாக இணைந்து, மந்திரம் ஓதி பூணூல் அணிந்து கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பன்றிக்கு பூணூல் அணிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதையொட்டி போலீசார் அவர்களை கைது செய்தனர்.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, பெரியார் திராவிட கழகத்தினரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த பன்றிகளை மீட்டனர். ஆனாலும் ஒரு பன்றி குட்டி இறந்ததாக தெரிகிறது. இதையடுத்து, மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பன்றிக்கு பூணூல் போடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விலங்குகளை துன்புறுத்தியது, தடையை மீறி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.