சசிகலாவை நீக்குவதாக சொன்னால் விட்டு வைப்போமா? - வெற்றிவேல் எம்.எல்.ஏ தெனாவட்டு...
சசிகலாவை நீக்குவதாக சொன்னால் விட்டுவைப்போமா எனவும், அதனாலேயே டிடிவி தினகரன் வைத்தியலிங்கம் மீது நடவடிக்கை எடுத்தார் எனவும் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு நேற்று நடைபெற்றது. இந்த இணைப்பு விழா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இணைப்புக்குப் பிறகு பேசிய வைத்தியலிங்கம் எம்.பி., கட்சியின் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்றும், அப்போது, சசிகலா நீக்கப்படுவார் என்றும் கூறியிருந்தார்.
அவரின் இந்த பேச்சால், டிடிவி தினகரன் தரப்பில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் வித்யாசாகர் ராவை, டிடிவி தினகரன் ஆதரவாகள் இன்று சந்தித்து, எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.
இதைதொடர்ந்து, எம்.பி. வைத்தியலிங்கம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எம்.பி. வைத்தியலிங்கம், என்னை கட்சியில் இருந்து நீக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்றார்.
இந்நிலையில் செய்தியாளரகளை சந்தித்த பெரம்பூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல், சசிகலாவை நீக்குவதாக சொன்னால் விட்டுவைப்போமா எனவும், அதனாலேயே டிடிவி தினகரன் வைத்தியலிங்கம் மீது நடவடிக்கை எடுத்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் எனவும், திமுகவுடன் சேர்ந்து அதிமுகவுக்கு எதிராக வாக்களித்து பன்னீருக்கு ஏன் பதவி தரவேண்டும் எனவும், குறிப்பிட்டார்.