ஜாமீன் வண்டி… ஜாமீன் வண்டி….காங்கிரஸ் தலைவர்களை செமையா நக்கலடித்த மோடி !!
காங்கிரஸ் தலைவர்கள் பலர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு தற்போது ஜாமீனில் உள்ளதால் அவர்களை பொது மக்கள் ஜாமீன் வண்டி என அழைப்பதாக பிரதமர் நரேந்தி மோடி கிண்டல் அடித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.2,100 கோடி மதிப்பிலான 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியின் ஜாம்பவான்களாக கருதப்படும் பெருந்தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும், ம் தற்போது ஜாமீனில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியும். அதனால், அந்த கட்சியை ‘ஜாமீன் வண்டி’ என்று மக்கள் அழைக்கிறார்கள் என கடுமையாக கிண்டல் செய்தார்..
கடந்த 2016-ம் ஆண்டு நமது ராணுவ வீரர்கள் துல்லிய தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்களின் வலிமையை நம்பாமல், அதுபற்றி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. இத்தகைய பாவத்தை செய்த காங்கிரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதற்கு முன்பு யாருமே இப்படி நடந்து கொண்டதில்லை என குற்றம்சாட்டினார்..
காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியலையும், பரம்பரை அரசியலையும் பின்பற்றி வருகிறது. ஆனால், நாம் நாட்டின் சுயமரியாதையை உயர்த்துவதில் உறுதி பூண்டுள்ளோம் என்றார் மோடி..
பாஜகவின் ஒரே செயல்திட்டம், வளர்ச்சிதான். ஏழைகள், விவசாயிகள், பெண்கள் ஆகியோரை மனதில் வைத்துத்தான் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.