மக்களே உஷார்.. சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரம்.. 318 இடங்களில் போலீசார் வாகன தணிக்கை..
முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது காவல்துறையினரால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், சென்னை பெருநகரம் முழுவதும் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன.
கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசின் முழு ஊரடங்கையொட்டி சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 10-5-2021 அன்று காலை 4 மணி முதல், 24-5-2021 அன்று காலை 4 மணி வரை தமிழக அரசின் முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதில் பாதுகாப்பு பணிக்காக மொத்தம் 10,000 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறை சார்பில் 118 இடங்களிலும், போக்குவரத்து காவல் சார்பிலும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை பெருநகரம் முழுவதும் சுமார் 370 ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அம்மா உணவகங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகள் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோயம்பேடு மார்க்கெட், காசிமேடு மீன் மார்க்கெட் பகுதிகளில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாதவர்கள் மீது காவல்துறையினரால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், சென்னை பெருநகரம் முழுவதும் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து காவல்துறையினர் உரிய காரணங்கள் இன்றி வாகனங்களில் வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள 118 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும். நகரம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் தவிர மற்ற சாலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு பற்றிய விழிப்புணர்வு தொடர்பான பொதுவான ஒளிப்பதிவு நாடா தயார் செய்து ஒலிபெருக்கி மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது. இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் சென்னை மாநகர காவல் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.