வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு - சசிகலா ஆதரவு அமைச்சர்களுக்கு தொடரும் எதிர்ப்பு
திருச்சி மாவட்டம், பெட்டாவாய்த்தலை பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழா, பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சேம்பரசம் பேட்டை பகுதியில் நடந்த விழாவில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அந்த விழாவுக்கு சென்றால், அமைச்சர்கள், இந்த விழாவில் கலந்து கொள் முடியாது. ஏற்கனவே ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மீது அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர் என்ன்ற தகவல் அமைச்சர்களுக்கு கிடைத்தது. இதனால், சைக்கிள் வழங்கும் விழாவை ரத்து செய்தனர்.
இதைதொடர்ந்து, பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் வளர்மதி, அவசர அவசரமாக பேசி முடித்தார். அவரை தொடர்ந்து, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச தொடங்கினர்.
அப்போது, கூட்டத்தின் ஒரு மூலையிலிருந்து, தொடர்ந்து 3 முறை கல் வீசப்பட்டது. ஒரு கல், பேசிக் கொண்டிருந்த அமைச்சரின் கால் அருகே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதை பார்த்த அமைச்சர் நடராஜன், 'எப்படி மிரட்டினாலும், எங்களின் பொதுச்செயலர் சசிகலா தான் அதை யாராலும் மாற்ற முடியாது' என ஆவேசமாக பேசினார். கற்கள் வந்த பகுதியை நோக்கி போலீசாரும், கட்சி யினரும் சென்று பார்த்த போது, அங்கு யாரும் இல்லை. அதன்பின், சிறிது நேரம் கூட்டம் நடந்தது.
பின், போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் புறப்பட்டனர். அமைச்சர் வளர்மதி மீது, மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியால் கல் வீச்சு சம்பவம் நடந்ததாக, அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.